Saturday, October 6, 2007

தொழில் தர்மங்கள்!!


யன்னல் திறக்க தடை செய்யும்
குளிரூட்டப்பட்ட அறையின்
நான்கு சுவருக்குள்
பகுத்தறிவது கடினம்
காலை மாலை இரவுகளை!

உள்ளிருக்கும் எந்த பொழுதிலும்
செய்தலாகாது
பசி தூக்கம் பற்றிய
நினைத்தலெனும் தவறுகளை!

இகழ்ச்சியின் எல்லா சப்தங்களின்
இடையிலும் நழுவாது
இருக்கிறது உதட்டோரம்
ஒரு புன்னகை!


பொருட்படுத்த நேரமற்ற
உடலுறுப்புகளின்
வலி அனைத்தும்
ஒரு வகையில்
தொழில் இரகசியங்கள்!

மாறும் மருந்துகளிலும்
மருத்துவன் கையெழுத்து கிறுக்கல்களிலும்
அழிகிறது இளமையின் வண்ணம்!


மேல் சொன்ன அனைத்தையும்
பொருட்படுத்தாது
பல்லிளிக்கிறது மனம்
பணப்பை கனக்கையில்!

எந்த வகையில் நோக்கினாலும்
எனக்கும் வேசிக்கும்
பெரிய வித்தியாசம் இல்லை!

7 comments:

pRaBhU said...

Kind of disagree to this comparison. A large proposition of prostitutes are forced to do it. So you are worse than a pros'!

LakshmanaRaja said...

:-))))))))

தமிழ்நதி said...

இந்தப் பொருளாய உலகில் இப்படித்தான் வாழவேண்டியிருக்கிறது நண்பரே! நீங்கள் சொன்ன அதே உணர்வை-நாற்காலியோடு கட்டப்பட்டிருந்த நாட்களை நானும் அனுபவித்திருக்கிறேன். கவிதைகளின் கருவறையே அவற்றுக்கான கல்லறையுமாயிருக்கிறது.

"எனக்கும் வேசிக்கும்
பெரிய வித்தியாசம் இல்லை!"

முடிவு நன்றாக வந்திருக்கிறது.

LakshmanaRaja said...

நன்றி தமிழ்நதி அவர்களே. புரிதலைக்கும் அதை கடந்து உணர்தலுக்கும்.

நான் இப்பொழுது நாற்காலியோடு தான் இருக்கிறேன். என் உருவம் பொருந்தாத சௌகரியம் அற்ற இருக்கையோடு.

M.Rishan Shareef said...

மிக அருமையான கவிதை.இன்றைய எனது வாழ்க்கையையும் அப்படியே எடுத்துக்கூறுகிறது.
இப்படித்தானே இருக்கிறது
அலுவலக நாற்காலிகளோடு கட்டிப்போடப்பட்ட
நிறைய இளைஞர்களின் வாழ்க்கை...!
வெளியிட முடியாத ஏக்கங்களோடும்...
வேலை கிடைக்காத இளைஞர்களின் பொறாமை கலந்த பெருமுச்சுக்களை எதிர்கொண்டவண்ணமும்..!

LakshmanaRaja said...

நன்றி நண்பரே.
ஆம்.நீங்கள் கூறிய அதே தான் என் அனுபவமும்.

ரூபன் தேவேந்திரன் said...

வணக்கம்,
நானும் கவிதை போல சிலவற்றை எழுதினாலும், பிறரின் கவிதைகளை படிக்கையில் அதை புரிந்து கொள்வதற்குள் தலைவலிக்க ஆரம்பித்து விடுகின்றது. இருப்பினும் ஒரு வாசிப்பிலேயே மனதில் வந்தமர்ந்து கொள்கிறது கவிதை. நன்றாக இருக்கிறது

உங்களின் கவிதையை கண்டுபிடிக்க வலைச்சரத்தில் சுட்டி கொடுத்த தமிழ்நதிக்கும் நன்றி