Thursday, May 31, 2007

என் வழியில்


எதை உணர? எதை உரைக்க?
எதை நினைக்க?எதை மறக்க?
எதில் தெளிய? எதில் ஒளிய?
கேள்விகள் படிக்கும் முன்னே
வெற்றியோ தோல்வியோ
வெளிவருகின்றன தேர்வின் முடிவுகள்!
உண்மையாக சொல்கிறேன்
தேர்வை நான் எழுதவில்லை !


யாரோ உடைக்கிறார்கள்
நான் உடைகிறேன்! சிதறிய
என் துண்டுகளால் என்னை காயப்படுத்தும் பொழுது
யார் மேல் கோபம் கொள்ள?
எச்சரிக்கை தேவை!
எப்படியோ கல்லான என்னை
பெண்ணாக்க காத்திருக்கலாம்
சில பாதங்கள்!!

கதவாக ஆசை பட்டு
வாசலுக்கு வந்ததை
மறப்பது கடினம்!


நடக்க வேண்டியவையின்
இடையில் எப்படி வந்தன
நடக்க கூடாதவைகள்?
பகுத்தறியும் அளவிற்கு
ஆண்டவனுக்கு அனுபவம்
இல்லையோ?

காலப் பாதையில்
என் அடையாளங்களை
சேகரிக்கும் ஒவ்வொரு நொடியுலும்
உடை மாற்றுகிறது மனது!
எப்படி அறிய போகிறேனோ
தெரியவில்லை
நாளை நான் என்னை!


வார்த்தையின் பள்ளத்தில்
அர்த்த கடல் விழுந்து
வீணாகிறது.
மிச்சமாய் நிற்பவை
வார்த்தைக்கான அர்த்தங்கள்!
எங்கே தேடுவேன்
அர்த்தங்களுக்கான வார்த்தைகளை?


வாழக்கை படிகளில்
சறுக்கி விழுந்தாலும் ஒரு படி
மேலே தான் விழுவோம்
விழுதலில் தவறில்லை!

உடலோடு இல்லாதவனாய்
உயிரோடு இல்லாதவனாய்
ஊர் சொல்லலாம்.
எப்படி நான் சொல்வது
என்னை?

எதுவும் சொல்வதற்குள்


காகிதம்,துவ்வல்,
வார்தைகளின் வழியாக
தீர்ந்து விடுகிறேன்
நான்!



Sunday, May 6, 2007

உணர்வுகள்


உணர்வுகள்
உணர்த்தபடவேண்டியவை அல்ல‌
உணர படவேண்டியவை!